விண்கல்லும் வித்தக பெருமாளும் - பாகம் 2


 
'தமிழனே தமிழன்.. 1300 வருடங்களுக்கு பிறகு நடக்கும் விடயத்தையும் முன்கூட்டியே ஆரூடம் சொல்லி இருக்கிறானே..'

வித்தகனார் திருமொழிந்தார்.

'சொல்லி என்ன பயன். இப்போது இவ்வாறான பொருட்கள் விழுவதும் வாடிக்கைதானே..?'


அவநம்பிக்கையாக பேசினார் மற்றொருவர்.


'இருந்தாலும் இன்று காலை கேட்ட செய்தியும், இன்றே இந்த கல்வெட்டு கிடத்தமையும் எனக்கு எதனையோ உணர்த்துவதாக உணர்கிறேன்'

வித்தகர் சில நொடிகள் சுவாமிகளாகவே மாறினார்.

தோண்டப்பட்ட சுரங்கத்தின் மேற்சுவற்றில் இருந்து ஒரு பல்லி, வித்தகரின்; தோளில் வீழ்ந்தது.

'ஆஹா... அருமையான விடயம். உண்மையில் இதில் கடவுள் ஏதோ ஒரு தகவலை சொல்லி இருக்கிறார்.'

வித்தகரை விட வயதில் சற்று பெரியவர் ஒருவர் சொன்னார்.

யாருக்கும் கிடைக்காத பாக்கியம் தமக்கு கிடைத்ததாக கருதிக்கொண்டார் வித்தகர்.

கல்வெட்டை எடுத்து லேசர் ஏற்றியில் வைத்து மேலே கொண்டு செல்ல விட்டுவிட்டு, மீதக் கல்லையும் தேடச் சொல்லி உத்தரவிட்டார்.


அதற்குள்,

தமது காதில் செறுகி இருந்த அலைபேசியில் நாசாவில் உள்ள தமது மாணவர் ஜிராஜிக்கு தொடர்பை ஏற்படுத்தினார்.

கல்லைப் பற்றி கூறினார்.

வித்தகர் போலவே தமிழ் மணத்தை அனுபவிக்கும் மற்றுமொரு விஞ்ஞானி அவர்.

கல்லையும் வித்தகரையும் நாசாவுக்கு கூட்டிச் செல்லும் விண்ணோடம் சில மணித்தியாலங்களில் அந்த சுரங்கத்தை நோக்கி வந்தது.

அந்தரத்தில் தொங்கிய படியே லேசர் படிக்கட்டுகளை இறக்க, வித்தகர் கல்லுடன் ஏறிக் கொள்ள, படிகட்டுகள் தானாய் சுழன்று விண்ணோடத்தை அடையச் செய்தது.

இரவு 9 மணி

நாசாவின் பிரதான மையத்தில் அதன் தலைவருக்கு அருகில் அடுத்த தலைவருக்கான அத்தனை அம்சங்களும் பொருந்தியவராக 30 வயதான ஜிராஜ் நின்றுக் கொண்டிருந்தார்.

தமது ஆசான் வித்தக பெருமாளைப் போலவே தாடி மீசை, தலைமயிரை வளர்த்து விட்டிருந்தார். கண்ணாடி அணிந்திருந்தார்.

ஆனால் கோர்ட் சூட் என்று மேற்கத்தேய நாகரிகத்தின் உடையை மட்டும் மாற்றிக் கொள்ளாதவராய் இருந்தார்.

வித்தகர் தலைமையகத்துக்கு நுழைவதற்காக நடந்து வர, கல்வெட்டை ஏந்திய லேசர் கை ஒன்று கூடவே வந்தது.

அவர் உள்ளே நுழைந்த போது, ஜிராஜ் அவரை மரியாதையுடன் வரவேற்று, தமது தலைவருக்கு அறிமுகப்படுத்தி வைத்து கல்வெட்டையும் காண்பித்தார்.

கல்வெட்டுக்கு மேலே காட்டப்பட்ட மெய்நிகர் நீல ஒளி ஒன்று, அதில் எழுதி இருந்த தமிழை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துக் காட்டியது.

நாசாவின் தலைவர் அதற்கு ஆச்சரியப்பட்டவராக தெரியவில்லை.

ஜிராஜ் உடன் அவர் பேசிக் கொண்டிருந்தார்.

'இந்த குழாய் வடிவப் பொருளொன்று ஏற்கனவே 2015ம் ஆண்டு சிறிலங்கா எனும் ஒரு இடத்தில் விழுந்திருக்கிறது. அத்துடன் இதில் இந்த திகதியில்தான் விழும் என்றெல்லாம் எதுவும் கூறப்படவில்லை. எனவே இதனை பெரிதுப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை.'

அவரின் கூற்று அப்படி இருந்தது.

வித்தகர் குறுக்கிட்டார்..

'இந்த குழாய் வடிவப் பொருள் பற்றி நான் ஆச்சரியப்படவில்லை. எல்லாம் நீங்களும் உங்கள் முன்னோரும் அனுப்பியவைதானே. அதனை தொடர்ந்து இன்னொரு கல் விழும் என்றிருக்கிறது பாருங்கள். அதைப்பற்றிதான் யோசிக்கிறேன். அது எதுவும் ஆபத்தை ஏற்படுத்துமா?'


நாசாவின் தலைவர் சற்று யோசித்தார்.

இதற்கிடையில் இன்று விழுவதாய் இருந்த குழாய் வடிவ பொருளும் பூமியில் விழும் நேரம் வந்தது.

அதன் காட்சிகள் அகன்ற திரையில் காண்பிக்கப்பட்டன.

மணிக்கு 40 ஆயிரம் கிலோமீற்றர் வேகத்தில் அந்த விண்பொருள் பூமியின் வளிவெளியில் பிரவேசித்து தீப்பற்றி சாம்பலானது. அதன் சிறிய சில பகுதிகள் மாத்திரம் கடலில் விழுந்தன.

நொடிப்பொழுதில் இது நடந்துவிட்டது.

'இதனை அடுத்து வரும் என்று நீங்கள் கருதும் விண் கல்லுக்கும்;, இதுதான் கதி'

சிரித்தபடியே சொன்னார் நாசாவின் தலைவர்.

'இதனை விட பல மடங்கு பெரியதாக இருந்தால்?'

சந்தேகத்துடன் கேட்டார் வித்தகர்... .

திடீரென நாசாவின் திரைவில் விண்வெளியில் உள்ள பிரதான ஆய்வு மையத்தின் தொடர்பு இணைக்கப்பட்டது.

'எச்சரிக்கை...


சல்ஃபூரிக் மற்றும் பொஸ்பூரிக் தின்மநிலை அமிலங்களால் ஆன மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமியை நோக்கி அதி வேகமாக வந்துக் கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு நாட்களில் அது பூமியில் வந்து மோதும். அதன் வேகம் மணிக்கு 3 லட்சம் கிலோமீற்றர்கள். '



எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

நாசாவின் தலைவர் கல்வெட்டுக்கு அருகில் சென்று அதனை தடவிக் கொடுத்தார்.

'இதன் மீதத்தையும் உடனடியாக தேடச் சொல்லுங்கள்'

'தேடச் சொல்லிவிட்டுதான் வந்தேன். விரைவில் கிடைத்துவிடும். இப்போது இதற்கு என்ன செய்ய போகிறோம்'

நாசாவின் தலைவர் சற்றே சிரித்துக் கொண்டு, தமது கைப்பேசியில் எதனையோ செய்து, அதனை பிரமாண்டமான திரையுடன் இணைத்து ஒரு காணொளியை காண்பித்தார்.

அதில் மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமியை நோக்கி வந்துக் கொண்டிருந்தது.

பூமியை மிகவும் அருகில் நெருங்கி வரும் பேதே அதன் பாதையில் மாற்றம் ஏற்பட்டது. அது வளைவாக பயணிக்க ஆரம்பித்தது.

பின்னர் அந்த கல் பூமிக்கும் நிலவுக்கு இடையில் சற்று தொலைவில் பறந்து மறைந்து போனது.

வித்தகர் அதனை பார்ந்து வியந்தாலும், விளங்காதவராய் நாசாவின் தலைவரை பார்த்துக் கொண்டிருந்தார்.

'வரப்போகும் அந்த கல்லுக்கும் அதுதான் நடக்கும்'


நாசாவின் தலைவர் சொன்னார்.

'சற்று விளக்கமாக கூறுங்கள்'

'பூமியை பாதுகாப்பதற்கான எமது வியூகங்கள் நீண்டகாலத்துக்கு முன்னரே செய்து முடிக்கப்பட்டு விட்டன. நீங்கள் பார்த்தது எமது லேசர் ஒளிக்கற்றைகளால் விண்கல் ஒன்று கட்டுப்படுத்தப்படும் காட்சி. லேசர் ஒளிக் கற்றைகளை உறுதியான தின்ம நிலைக்கு மாற்றி இருக்கிறோம். இது கணிப்பிட முடியாத மடங்கில் நீளமாகவும், பருமனாகவும் விரிவடைந்து விண்ணில் செயற்பட்டு பூமியை பாதுகாத்திருக்கிறது. எத்தனை பெரிய விண்கல் வந்து விழுந்தாலும், அது பூமியை நெருங்காதபடிக்கு இந்த லேசர் ஒளிக்கற்றைகள் திசை திருப்பிவிடும். யாரும் அஞ்சத் தேவையில்லை.'

மிகவும் ஆச்சரிப்பட்டுப்போனார் வித்தகர்.

'இந்த திட்டம் ஏன் இன்னும் அறிவிக்கப்படவில்லை' (வித்தகர்)

'இதனை இரகசியமாக வைத்திருப்பது மேலிடத்து உத்தரவு'

'இதனை பயன்படுத்தவும் மேலிடத்து உத்தரவை பெற வேண்டுமா?'

'நிச்சயமாக. ஆனால் அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அது ஒருபக்கம் நடக்கும். நாளை மறுதினம் வரும் விண்கல் திசை திருப்பப்படுவதை நீங்கள் இங்கிருந்தே பார்வையிடலாம். இந்த கல்வெட்டை பிரதி எடுத்து ஊடகங்களுக்கு அனுப்பி வையுங்கள். உங்கள் பரம்பரையின் புகழ் உயரும்'


வித்தகருக்கு நிம்மதியாகவும், பெருமையாகவும் இருந்தது.

மூன்றாவது நாள், அந்த விண்கல் உலகை நெருங்கி இருந்தது.

விண்வெளி முழுக்களும் நிரம்பி இருந்த கமராக்களின் துணையுடன் அந்த விண்கல்லின் ஓட்டக் காட்சி திரையில் தெரிந்தது.

அந்த விண்கல் வெற்றிகரமாக திசைத்திருப்பட வேண்டும் என்ற பிரார்த்தனை எல்லோர் மனதிலும் இருந்தது.

விண்கல்லை எதிர்கொல்வதற்கு தின்ம லேசர் ஒளிக்கற்றைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

விண்கல்லும் வந்துவிட்டது.

ஒளிக்கற்றைகள் லாவகமாக ஒரு வளையத்தை ஏற்படுத்தி இருந்தன.. அந்த வளையத்தோடு விண்கல்லும் வளைந்து அதன் பாதை திசைத் திருப்பப்படுவதை நாசாவின் தலைமையகத்தில் இருந்த விஞ்ஞானிகள் ஆச்சரியமின்றி பார்த்துக் கொண்டிருந்தனர்.

சில நிமிடங்களில் அந்த கல் பூமியில் இருந்து வெகு தூரத்தில் பாதையை மாற்றிக் கொண்டு பயணித்தது.

சில நிமிடங்கள் பூமி வெளிச்சமாகவும், வெப்பம் நிறைந்ததாகவும் இருந்தது.

கல் பூமியை தாக்கவில்லை என்பதை விட, தங்களின் பாதுகாப்பு வியூகம் வெற்றி அளித்த மகிழ்ச்சி அனைவருக்கும்.

ஒருவரை ஒருவர் அணைத்துக்கொண்டும், கையடித்துக் கொண்டும் குதித்துக் கொண்டும் ஆரவாரித்தனர்.

ஒருவர் மட்டும் கதிரையில் அமர்ந்துக் கொண்டிருந்தார்.

தன் கைப்பேசியையே பார்த்துக் கொண்டிருந்தார்.

வித்தகர் எதற்காக அப்படி சோகமாக அமர்ந்திருக்கிறார் என்பதை அறிய நாசாவின் தலைவர் அருகில் சென்றார்.

வித்தகர் தன் கைப்பேசிக்கு வந்திருந்த ஒளிபடத்தை பிரமாண்டத் திரைக்கு மாற்றினார்.

மீதக் கல்வெட்டும் கிடைத்து, வெண்பாவின் முழு வடிவமும் கிடைத்திருந்தது..

எல்லோரும் வாசித்தார்கள்...

மண்ணன்று மற்ற மனி தன்செய்த குழலாய்

விண்னின்று வீழும், வீழுமுன் மாழும் - கண்ணுற்ற

ஈரொரு நாளாகி இச்சக மேவு மொருகல்

நீரறுத்து நிலம் தரு மே.


கீழே மொழிப்பெயர்ப்பும் இருந்தது.

'மண்ணால் அல்லாமல், மனிதனால் செய்யப்பட்ட குழாய் போன்ற ஒரு பொருள் பூமியில் விழுவதற்கு முன்னர் அழிந்து போகும். பின்னர் ஓரிரு நாட்களில் இன்னுமொரு கல் விழுந்து, நீரை அழித்து நிலத்தை உருவாக்கும்.'

ஜிராஜ் தமது கையில் இருந்த அறிக்கையை எடுத்து வாசித்தார்.

அந்த விண்கல் சல்பூரிக் மற்றும் பொஸ்பூரிக் அமிலத்தினால் ஆனது.

'இந்த அமிலம் கடலில் விழுந்தால், கடல் நீர் வற்றி போய், மீண்டும் நிலம் கிடைத்திருக்கும்'

ஜிராஜ் சொன்னார்...

வித்தகப் பெருமாள் வெளியே போய்க் கொண்டிருந்தார்...

அவர் தலை குனிந்தபடி இருந்தது...
 


முற்றும்....

இதன் முதல் பாகம்

விண்கல்லும் வித்தக பெருமாளும் - பாகம் 1 



உங்கள் கருத்துக்களே இந்த பதிவின் பலனாக அமையும். வாசிப்பு அனுபவத்தை கீழே பதிவு செய்யுங்கள்... நன்றி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக